இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, April 03, 2006

வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...





‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ _ ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம் பெற்ற இந்தச் சின்னத்திரையின் செல்லப் பாடலை பாடியிருப்பவர் ‘கானா’ உலகநாதன். இப்போது, இவர் எங்கு சென்றாலும், ஒரு ரசிகர் கூட்டம் இவரைச் சூழ்ந்து கொள்கிறது.

‘‘சினிமாவில் அப்போது என்ன பாட்டு பிரபலமோ, அந்தப் பாடலை அப்படியே கானா ஸ்டைலுக்கு மாற்றி பாடிக்காட்டுவதுதான் என்னோட ஸ்பெஷாலிடி.

இளையராஜாவின் இசையில், ‘அன்னக்கிளி’யில் வந்த ‘‘மச்சானைப் பார்த்தீங்களா... மலைவாழை தோப்புக்குள்ளே’ பாடலை, நான் எப்படிப் பாடுவேன் தெரியுமா? அப்போது ‘மில்லி’ கடைகள் தமிழ்நாட்டில் சந்து பொந்தெல்லாம் இருந்த நேரம். ஒருத்தி தன்னுடைய கணவனை சாராயக் கடையில் தேடுகிறாள். இதை நான் ‘என் புருஷனை பார்த்தீங்களா? அந்தச் சாராயக்கடைக்குள்ளே’ என்று பாடினேன். இந்தப் பாட்டை குடிமன்னர்களெல்லாம் நேயர் விருப்பமாக, என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார்கள். பாடினால் பையிலிருப்பதைக் கொடுப்பார்கள்’’ என்று கூறும் உலகநாதனுக்குப் பெளர்ணமி நிலவு என்றால், ரொம்பப் பிடிக்குமாம். குஷியில் மூடு பிய்த்துக் கொள்ளுமாம். பாட ஆரம்பித்து விடுவாராம். உடனே அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் சூழ்ந்து நின்று ரசிப்பார்களாம்.


‘‘என்ன பாடி என்ன பிரயோசனம் சார்? பெரிசா ஏதும் வருமானம் இல்லை. சம்பாதிப்பது வயித்துக்கும் வாயிக்குமே பத்தும் பத்தாமல்தான் இருந்தது.

சாவு வீட்டில் பாட கூப்பிடுவார்கள்.

என் அப்பாவிற்கு நான் சாவு வீட்டில் பாடுவது மட்டும் சுத்தமாகப் பிடிக்காது. ‘டேய் இதெல்லாம் என்னடா பொழப்பு?’ என்பார். சரி இனிமே போகக் கூடாது என்று முடிவு பண்ணி இருந்தால், ஏரியா பசங்கள் கம்பெல் பண்ணி கூட்டிட்டு போயிடுவாங்க...’’ கூறிவிட்டுச் சிரித்தவர், தொடர்ந்தார்.

‘‘நான் மிகப்பெரிய ஃபுட்பால் பிளேயர். ஆனால், என்னை ஊக்கப்படுத்தத்தான் யாருமே இல்லை. குடும்பக் கஷ்டம் வேறு கழுத்தை நெரிச்சது. அதனால, அதில் என்னால் சரியான முறையில் கவனம் செலுத்த முடியலே.

எனக்கு ஒழுங்கான வருமானம் இல்லை என்பதால், வெளியில் பெண் கொடுக்கத் தயங்கினார்கள். அந்தச் சமயத்தில் என் மாமா பெண் ஷகிலா, ‘மாமா நான், ‘உன்னைக் கட்டிக்கிறேன். நீ நிச்சயம் பெரியாளா வருவே’ என்றாள். என் அப்பா உடனே அவளையே கல்யாணம் பண்ணி வைத்தார்.



முன்பு தனியார் கம்பெனியில் தான் வேலை பார்த்தேன். திடீரென்று கம்பெனியில் ஸ்ட்ரைக் வர, வேலையும் போய் விட்டது. இந்தப் பத்து வருஷமா கானா பாட்டுதான் சோறு போடுது. நான் என்ன கொண்டு வருகிறேனோ அதை வைத்து குடும்பம் நடத்துவாள் என் அருமை மனைவி ஷகிலா. ஒருநாள் கூட, ‘எனக்கு இது வேணும் அது வேணும்’ என்று அவள் கேட்டதே கிடையாது. அவள் மனது ஏதாவது வருத்தத்துடன் இருந்தால், ‘மாமா பாட்டு ஏதாவது பாடுங்க’ என்பாள். நானும் பாடுவேன். என் கன்னுக்குட்டி அந்தப் பாட்டில் கவலைகளை மறந்துடும்’’ அருகிலிருந்த மனைவி வெட்கப்படுகிறார்.

‘‘காமராஜ், வசந்தராஜ், நந்தினி என்று மூன்று வாரிசுகள். காமராஜ் மட்டும் கம்பெனியில் வேலைக்குப் போகிறான். மற்ற இருவரும் படிக்கிறார்கள். எனக்குத்தான் படிப்பு வரலை. என் குழந்தைகளாவது நல்லா படிக்கணும் என்பதுதான் என் ஆசை.

லோக்கல் லைட் மியூசிக்கில் பாடிக்கிட்டிருக்கேன். இதுதவிர, கருணாஸ் அடிக்கடி வாய்ப்பு கொடுப்பார். டி.எம்.எஸ். வாய்ஸில் நான் பிரமாதமாகப் பாடுவேன். கவிஞர் கபிலன்தான் என் வாழ்க்கைப் பாதையை மாற்றினார். ‘மச்சி’ படத்தில் பாட அவர்தான் எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அதில் ‘கும்மாங்கோ கும்மாங்கோ...’ என்ற பாட்டைப் பாடினேன். பாடல் பிரபலமாயிற்றே தவிர, அந்தப் படம் ஓடவில்லை. கபிலன் மீண்டும் மிஷ்கினிடம் அறிமுகப்படுத்தினார்.

‘சித்திரம் பேசுதடி’ படத்தில் வரும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...’ என்ற பாட்டை அவரிடம் பாடிக்காட்டினேன். ‘பாட்டின் வரிகள், டியூன் எல்லாமே நன்றாக இருக்கிறது... இதையே ரெக்கார்டிங் பண்ணிடுவோம்’னு சொன்னார். நான் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பாடும் ஸ்டைலைப் பார்த்து விட்டு, ‘பேசாமே நீங்களே இந்தப் பாட்டைப் பாடி நடிச்சிடுங்களேன்’ என்றார். படம் வெளி வந்தது. நான் எதிர்பார்த்த அளவிற்கும் மேல் அந்தப் பாடலும் பிரபலமானது. நானும் பிரபலமாகிட்டேன். ரோட்டில் போக முடியவில்லை. என்னைப் பார்த்தவுடன் ‘நீங்க உலகநாதன் தானே அந்த ‘வாள மீனுக்கும்...’ பாட்டை பாடுங்க’ன்னு கேட்கிறாங்க. இதனால் இரண்டொரு முறை டிராஃபிக் ஜாம்கூட ஆகிட்டது. அந்தப் பாட்டில் முத்துராஜ் என்ற பையன்தான் எனக்கு மைக் பிடிப்பான். இந்தப் பாட்டின் மூலம் அவனும் பிரபலமாகிவிட்டான்.

டூவீலரில் போகும்போது, ஹெல்மெட் போட்டுக்கிட்டுதான் போறேன். இதனால் ஏதோ என் சுதந்திரமே பறிபோய்விட்டது போன்ற உணர்வு. ஆனா, இதுகூட சந்தோஷமாதான் இருக்கு...’’ என்று கூறிச் சிரிக்கிறார் உலகநாதன்.

பேட்டி : சந்துரு
படங்கள் : சித்ராமணி

நன்றி : குமுதம்29-03-2006 இதழ்
type="text/javascript">&cmt=3&postid=114404956701518769&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger பாரதிய நவீன இளவரசன் said...

'வாழமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' கானா உலகநாதனுக்கு சித்திரம் பேசுதடி நல்லதொரு break-ஐ கொடுத்துள்ளது.

http://www.hindu.com/2006/04/02/stories/2006040215360500.htm

புதிய பட வாய்ப்புகள், ஆல்பம், ரசிகர் கூட்டம், அது இதுன்னு மனிதருக்கு கூரையைப் பிளந்துகிட்டு கொட்டுகிறார் சாமி.

கானாப்பாட்டை மட்டுமே நம்பியிராமல் அடுத்த அடுத்த concept-ற்கு மாற வேண்டும். அதுதான் புகழை, வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்ள ஒரே வழி...

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்

Monday, April 03, 2006 2:07:00 AM

 
Blogger Dr.Srishiv said...

நன்றி வெங்கடேஷ்,
தங்களின் பின்னூட்டத்திற்கு, இதன் அடுத்த காண்செப்ட் என்றால் தாங்கள் எதனைச்சொல்கின்றீர்கள் என்று எனக்குப்புரியவில்லை? சற்று விளக்கமாகக்கூறினால் மகிழ்வேன்...
பிரியங்களுடன்,
ஸ்ரீஷிவ்...

Monday, April 03, 2006 3:18:00 AM

 
Blogger வலைஞன் said...

இந்தப்படம் நிறையப்பேருக்கு புது வாழ்வையும் அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது! கானா உலகநாதனின் பாட்டுத்தான் காரணமாகப் பேசப்படுகிறது. நன்றி

பாட்டுக்கேட்க

http://valai.blogspirit.com/archive/2006/04/02/சித்திரம்-பேசுதடி.html

Monday, April 03, 2006 6:41:00 PM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது